முல்லைத்தீவில் யாழ். ஆயர் இல்ல காணியில் சட்டவிரோதமாக பாரிய மணல் அகழ்வு - பீற்றர் இளஞ்செழியன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள உப்புமாவெளி பிரதேசத்தில் யாழ். ஆயர் இல்ல காணியில் சட்டவிரோதமாக பாரிய அளவிலான மணல் அகழ்வு இடம்பெறுவதாக தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேற்று மாலை சென்று அங்கு சட்டவிரோதமாக குவிக்கப்பட்டிருந்த மணல் குவியலை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உப்புமாவெளி பிரதேசத்தில் 5 ஆயிரம் டிப்பர்களில் ஏற்றக்கூடிய மண் குவியல் குவிக்கப்பட்டுள்ளது. இது ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணி என்று சொல்ல முடியும். தற்போது ஆயர் இல்ல காணியில் இரண்டு வகையான மணல் அகழ்வுகள் நடைபெறுகின்றன. ஒன்று அனுமதி பெற்று மற்றது அனுமதி அற்ற முறையில் நடக்கின்றது.
இது குறித்து ஆயர் இல்லத்தினர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். சட்டவிரோதமான இந்த நடவடிக்கையை மாவட்டத்தில் இருக்கக்கூடிய இராணுவத்தினர், பொலிஸார், தகுதி வாய்ந்த அதிகாரிகள் தடை செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
அவர்களும் இவர்களுடன் சேர்ந்து கையூட்டல் பெற்று அனுமதி வழங்கியுள்ளார்களா?? இது குறித்து அனைத்து தரப்பினரும் பதில் கொடுக்க வேண்டும். குறிப்பாக யாழ். ஆயர் இல்லம் இதற்கு பதிலளிக்க வேண்டும். இது யாருடைய காணி எதற்காக இந்த மண் குவிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஆயர் இல்லம் தான் இந்த மண்ணினை விற்கின்றார்களா? சட்டவிரோத மணல் குவிக்கப்பட்டுள்ள குறித்த காணியில் இன்னொரு பகுதியில் சட்டபூர்வ மண்ணகழ்வு ஒன்றும் இடம்பெறுகிறது.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்தும் இதுவரை நிறுத்தப்படவில்லை. தற்போதும் ஆயர் இல்லத்திற்கு பத்து இலட்சம் பணம் சென்றுள்ளதாக அறிகின்றேன்.
நாட்டில் மக்கள் பயணத்தடையினால் முடக்கப்பட்ட நிலையில் இந்த மணல் குவிப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கு முற்று முழுதான பொறுப்பு ஆயர் இல்லம் தான் கூறவேண்டும். சட்டரீதியான மணல் அகழ்வும் இடம்பெறுகின்றது. சட்டத்திற்கு புறம்பான மணல் அகழ்வும் இடம்பெறுகின்றது. விரைவில் இது நிறுத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் ஏன் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை? உடனடியாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.