ஊழலை ஒழிப்பதற்காகவே மக்கள் அநுர ஆட்சியை தெரிவு செய்தனர்! வடக்கு மாகாண ஆளுநர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தமைக்கான பிரதான காரணம் ஊழலை ஒழிப்பதற்காகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று(10.4.2026) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட மணல் மற்றும் கிரவல் விநியோகக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ள அதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் மணலின் விலையும் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. எனவே, மணல் விநியோகச் சங்கிலியை ஒழுங்குபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது.
மணல் விநியோகப் பிரச்சினை
இந்த அரசாங்கத்தின் காலத்தில் மணல் விநியோகப் பிரச்சினைக்கு நாம் தீர்வு காண முடியாவிட்டால், வேறெந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதற்குத் தீர்வு காண முடியாது எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு, இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சியிலிருந்து புதிய பொறிமுறையூடாக ஒரு மாத காலத்தினுள் மணல் விநியோகத்தை ஆரம்பித்தல் மற்றும் மணலின் விலையை அரைவாசியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இங்கு கருத்துத் தெரிவித்த தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளர் சு.கபிலன், சட்டவிரோத மணல் விநியோக நடவடிக்கைகளை அரசாங்கம் மிக இறுக்கமாகக் கட்டுப்படுத்தும்.
புதிய பொறிமுறை
எதிர்காலத்தில் மணல் அனுமதி மற்றும் விநியோகத்தை இலத்திரனியல் மயப்படுத்தி QR குறியீடு ஊடாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளைத் தொடர்ந்து நீடிக்க வேண்டிய தேவை தற்போது இல்லை. உள்ளூராட்சி மன்றங்களுக்கே இதில் முன்னுரிமை வழங்கப்படும்.
அவர்கள் அதனைச் செய்யத் தவறினாலோ அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டாலோ மாத்திரமே, எதிர்காலத்தில் தனிநபர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் மாவட்டக் குழு ஆராயும், எனக் குறிப்பிட்டார்.
உருவாக்கப்படும் இப்புதிய பொறிமுறைக்கு முழுமையான பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகக் கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதன்போது உறுதியளித்தார்.