அநுர அரசின் கைது பட்டியலில் அடுத்தது சாணக்கியனா..! கருணா பகிரங்க அறிவிப்பு
அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும், ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறானவர்களில் நாடாளுமன்ற உறுப்பிர் சாணக்கியன் முக்கியமானவர். அவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா)Vinayagamoorthi Muralidaran தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சாணக்கியனும் ஊழல்வாதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் உள்ளது. அது இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாது. எனவே கிழக்கு மாகாணத்தை விட்டுக் கொடுக்கின்ற விலை பேசுகின்ற விடயத்தில் பொதுமக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்க கட்சியும் ஒரு ஆயுத குழுதான். அவர்களும் விடுதலைக்காக போராடியவர்கள்தான். அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று பழிவாங்கும் அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்வதென்பது ஏற்றுக்கொள்ள இயலாத விடயம்.
இருப்பினும் சிறந்த ஒரு அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு ஊழல் ஒழிக்கப்படுவதற்கு இவ்வாறானவர்களை தண்டிக்க வேண்டும். இவ்வாறான ஊழல் செய்வதில் சாணக்கியனும் முக்கியமானவர். அவரும் கைது செய்யப்பட வேண்டும்.
நடந்து முடிந்த யுத்தத்தில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் என பல உயிரிழப்புகளை நாம் சந்தித்துள்ளோம். இருப்பினும் நடந்தவை நடந்தவைதான். அந்த விடயங்களை மீண்டும் கிளருவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இனங்களுக்கிடையே முரண்பாடுகள் தான் தோற்றுவிக்கப்படும்.
வருகின்ற சந்ததிக்காக ஒரு புதுயுகத்தை நாம் அமைத்துக் கொடுக்க வேண்டும். பட்டலந்த வதை முகாம் பற்றி அதற்கான அறிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜேவிபி உறுப்பினர்களும் பல படுகொலைகளை மேற்கொண்டவர்கள். அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இவ்வாறான யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாம் இழந்தோம். இவற்றை நாம் மீண்டும் தோண்டுவதன் மூலம் ஒன்றுமே நடக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.