ஹிஷாலினியின் மரணம் - மலையக தமிழர், முஸ்லிம்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி! சாணக்கியன்
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து உயிரிழந்த ஹிஷாலினியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஹிஷாலியின் மரணத்திற்கு நீதி வேண்டி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வேடிக்கையானது எனவும், நீதியை நிலைநாட்ட போராட்டம் நடத்த வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஹிஷாலினியின் மரணத்தை வைத்து மலையக தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலமாக இருந்தால், முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையில் மோதல்களை உருவாக்கி அதனை தடுத்து நிறுத்தியது இந்த அரசாங்கமே என சிங்கள மக்களிடம் மார்தட்டிக்கொள்ள முயற்சித்திருக்கும் என அவர் குறிப்பிட்டுளார்.
எந்தவொரு விடயம் பற்றி பேசினாலும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் யுத்தம் பற்றியே பேசி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மத்திய வங்கி ஆண்டறிக்கை தொடர்பில் விவாத்தில் பங்கேற்று உரையாற்றிய போது ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு கூச்சல் எழுப்பியிருந்தனர்.
இதன்போது இவ்வாறான எருமை மாடுகளை வைத்துக் கொண்டு எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாங்கள் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் பேசவில்லை எனவும் நாட்டின் அபிவிருத்தி குறித்து பேசுவதனை செவிமடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆட்சியை கவிழ்ப்பது அல்லது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதோ தமது கட்சியின் நோக்கமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி ஏற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அது மக்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளை தம்மால் கொண்டு வர முடியும் எனவும் அதனை பிள்ளையான் தடுத்து நிறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.