எட்டு மாத சித்திரவதை! கோட்டாபயவிற்கு சுரேஷ் சலே வழங்கிய செய்தி - வெளிவரும் பல மர்மங்கள்
சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி போல் அன்றி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடிமையாகவே செயல்பட்டார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே குறித்து, கடுமையான விமர்சனங்களை பொன்சேகா முன்வைத்துள்ளார்.
சுரேஷ் சலே செய்த ஒவ்வொரு செயலும் கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியுடனும் ஆசியுடனும் தான் நடந்தது என தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்களின் முழுமையான ஆசிர்வாதம்
கோட்டாபய ராஜபக்சவின் அனுமதி இல்லாமல் சுரேஷ் சலே கழிவறைக்குக் கூட சென்றிருக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த முழு விவகாரத்திலும், தாக்குதல்களின் பிதான சூத்திரதாரி கோட்டாபய ராஜபக்ச என்றால், சுரேஷ் சலே அதன் வால் பகுதி போன்றவர் என தெரிவித்துள்ளார்.
இந்தச் செயல்பாடுகள் குறித்து ஏனைய ராஜபக்சவினரும் நன்கு அறிந்திருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய குண்டுதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினருடன் சுரேஷ் சலே மிக நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், சஹ்ரான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சுரேஷ் சலே மூலமாகவே சம்பளம் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் ராஜபக்சர்களின் முழுமையான ஆசிர்வாதத்துடனேயே இடம்பெற்றன என வலியுறுத்தியுள்ளார்.

பழிவாங்கல் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் எந்தவொரு வழக்குகளோ அல்லது குற்றச்சாட்டுகளோ இன்றி, என்னை எட்டு மாதங்களாகக் கைது செய்து காவலில் வைத்து சித்திரவதை செய்யுமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆலோசனை வழங்கியது சுரேஷ் சலே உள்ளிட்ட குழுவினர்தான் என தெரிவித்துள்ளார்.
அதனைக் கடந்து எனது மனைவி மற்றும் மகள்கள் கூட கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். விமான நிலையத்தின் போது கூட அவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.