நான் தந்தை வழியில் செல்லவில்லை : சஜித் அறிவிப்பு
தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச செய்தது அனைத்தும் சரி என்று தான் வாதிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று (08.06.2023 )உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து கூறுகையில், "தந்தை செய்த அனைத்தையும் பின்பற்றும் மகன் அல்ல நான். என் தந்தையார் ரணசிங்க பிரேமதாச செய்த நல்ல விடயங்கள் முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வேன்.
இலட்சிய போக்கு
அதேநேரம் குறைபாடுகள் இருந்தால் அதனை நிராகரித்துவிடுவேன். நீங்கள் செய்வதை எல்லாம் உங்கள் மகன் செய்கிறானா என்பது எனக்குத் தெரியாது.
நான் அதைச் செய்வதில்லை. நான் ஒரு சுதந்திரமான நபர். எனக்கு சுயாதீன புத்தியும் சுதந்திர எண்ணமும் உள்ளது. எனக்கென்று ஒரு இதயமும் மனசாட்சியும் இருக்கிறது.
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது எனது மறைந்த தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் செய்த நல்லதொரு செயலாகும்.
மேலும், தொழிற்சங்கத் தலைவர்களுக்கு என் தந்தை தீங்கு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். நானும் அவ்வழியே செல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?ஆனால் நான் அப்படிச் செய்ய மாட்டேன்'' என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்போது பதிலளித்த பிரதமர் தினேஷ், சஜித் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்ப்பாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |