கோட்டாபய - மகிந்த அரசாங்கம் படைத்த கின்னஸ் சாதனை! கிண்டலடித்த சஜித்
ஜனாதிபதி முதல் பிரதமர் வரையும், பிரதமர் முதல் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளனர் என்பதை முன்பள்ளி பிள்ளை கூட அறிந்த விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith premadasa) தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ மஹாராமவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் கூட அரசாங்கத்தை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தின் பதவிகளில் இருந்து விலகி, வெளியில் வந்து, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பிக்குமாறு அவர்களிடம் கோருகிறேன்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து மக்கள் அர்ப்பணிப்புகளை செய்தனர். 40 ஆண்டுகளுக்கு பின்னர் வரிசையில் நிற்கும் பரிசை அரசாங்கம் மக்களுக்கு வழங்கியது.
மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்து முடிவில்லாத அர்ப்பணிகளை செய்து வருகின்றனர். அரசாங்கம் கேட்பவற்றை எல்லாம் மக்கள் வழங்கினர்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவும் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவும் மக்கள் அரசாங்கத்திற்கு இடமளித்தனர். அவை அனைத்திற்கும் உதவியாக அரசாங்கம் தற்போது மக்களுக்கு செய்து வரும் விடயங்கள் தலைவிதியாக மாறியுள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. தேசிய வளங்களை விற்பனை செய்வதிலும் அரசாங்கம் சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ளது.
இலங்கை தற்போது பலமிக்க நாடுகளின் போர்க் களமாக மாறியுள்ளது. அரசாங்கம் நாட்டின் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு என பிரதேசங்களை போட்டி போட்டுக்கொண்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.