கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐ.தே.கவுடன் மாத்திரமே பேச்சு! ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்குச் சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே தற்போது பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.(Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அரசியல் செய்யும் உரிமை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைவருக்கும் அரசியல் செய்யும் உரிமை இருக்கின்றது. அந்தவகையில் மொட்டுக் கட்சி செயற்படுகின்றது. அவர்களின் நடவடிக்கை எமக்குச் சவால் கிடையாது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைவதையே கட்சி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். சிலர் எதிர்த்த போதிலும், பெரும்பாலானவர்கள் ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் எவ்வித மாற்றமும் வராது. சஜித் பிரேமதாஸவே தலைவர். அவருக்கே மக்கள் ஆதரவு உள்ளது.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.