ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலையீடு குறித்து சஜித் எச்சரிக்கை
மத்திய கிழக்கு போரில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் நேரடித் தலையீடு காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(29.3.2026) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யேமனின் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி அமைப்பினர், செங்கடல் மற்றும் பாப் அல் மந்தாப் நீரிணை ஊடாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துகள் மீது தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.
நேரடித் தாக்கங்கள்
இந்த நீரிணையானது ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பிரதான கடல்வழிப் பாதையாகும். இப்பாதையில் ஏற்படும் தடங்கல்களால் சர்வதேச விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, இலங்கைக்குக் கீழ்வரும் நேரடித் தாக்கங்கள் ஏற்படும்.
கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகள் மாற்றப்படுவதால், கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகையும் எரிபொருள் செலவும் அதிகரிக்கும்.

இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்கள், மருந்து மற்றும் உரங்களின் விலைகள் உயர்ந்து, மக்கள் கடுமையான வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதோடு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதன் காரணமாக உள்நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.
பொருளாதாரப் பாதிப்பு
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை மற்றும் தேயிலைக்கான உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், உலக சந்தையில் இலங்கை தயாரிப்புகளுக்கான போட்டித்தன்மை குறையும். இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை மேலும் பாதிக்கும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் ஒரு போர் வலயமாக மாறுவதற்கான அபாயம் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இதனால் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

வல்லரசு நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது, அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி நாட்டின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செங்கடல் வழித்தடம் மூடப்படுவதால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசிடம் முறையான மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை என்று சாடிய அவர், பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கோரினார்.
தற்போதைய இக்கட்டான சூழலில், அரசு வெறும் வேடிக்கை பார்க்காமல் நாட்டு மக்களின் நலன் கருதி துரித தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.