உக்ரைன் போர்க்களம்! அமெரிக்க-சீன ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை!
உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளார்
இந்த கலந்துரையாடல் தொலைபேசியின் ஊடாக இடம்பெறவுள்ளது.
இதன்போது ஏற்கனவே உலக நாடுகளால் பொருளாதார தடைகளுக்கு உட்பட்டிருக்கும் ரஷ்யாவுக்கு சீனா உதவியளிக்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரஷ்யா ஏற்கனவே உதவியளிக்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை மந்தமான உலகப் பொருளாதார மீட்சியின் போது ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவது தவறு என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான பீய்ஜிங்கின் பிரதிநிதி கூறியுள்ளார்.
அது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
தடைகளைப் பயன்படுத்துவது, எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது, மாறாக புதிய பிரச்சினைகளை உருவாக்கும் என்று ஜாங் ஜுன் வியாழனன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கூறினார்.
இதற்கிடையில் உக்ரைனில் போர்நிறுத்தம் செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை சீனா பகிர்ந்து கொள்கிறது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.



