ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பு: போர்க்கருவிகள் இன்றி நடைபெறவுள்ள வரலாற்று நிகழ்வு
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியை வீழ்த்தியதன் 81ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அடுத்த மாதம் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் (Red Square) பாரிய இராணுவ அணிவகுப்பை நடத்த ரஷ்யா தயாராகி வருகிறது.
இருப்பினும், உக்ரைனில் நிலவும் தற்போதைய போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அணிவகுப்பில் டாங்கிகள் உள்ளிட்ட கனரக இராணுவத் தளவாடங்கள் மற்றும் போர்க்கருவிகள் எவையும் காட்சிப்படுத்தப்படாது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
பொதுவாக மே 9-ம் திகதி நடைபெறும் இந்த 'வெற்றி தின' (Victory Day) கொண்டாட்டங்களில், ரஷ்யாவின் இராணுவ பலத்தைப் பறைசாற்றும் வகையில் நவீன ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் அணிவகுத்துச் செல்வது வழக்கம் என்றாலும், இம்முறை அந்த மரபு மாற்றப்பட்டுள்ளது.
போர்க்கருவிகள் இல்லாவிட்டாலும், ரஷ்யாவின் அனைத்துப் படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் இராணுவக் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் இந்த அணிவகுப்பில் கால்நடையாக பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்வழி அணிவகுப்பு
வான்வழி அணிவகுப்பு (Flypast) திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், இதில் ரஷ்ய போர் விமானங்கள் வானில் தேசியக் கொடியின் வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களைப் புகை மூலம் வெளியிட்டு சாகசங்களை நிகழ்த்தும் என்றும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, உக்ரைன் போரில் தற்போது ஈடுபட்டுள்ள வீரர்கள் மற்றும் கடற்படை, விண்வெளிப் படை வீரர்களின் தியாகங்கள் மற்றும் செயல்பாடுகள் இந்த நிகழ்வில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் போரில், ரஷ்யப் படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் மெதுவான ஆனால் நிலையான முன்னேற்றத்தைக் கண்டு வருவதாக மாஸ்கோ தரப்பில் கூறப்படுகிறது.
டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதே தமது இலக்கு என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அமெரிக்கா தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால், உக்ரைன் போர் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக முடங்கியுள்ள சூழலில் ரஷ்யா தனது தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக இந்த அணிவகுப்பை நடத்துகிறது.