உக்ரைன் மீதான போரின் தாக்கம்! ரஷ்ய அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (IT) நிபுணர்கள் ரஷ்யாவில் பணியாற்றுவதற்கு வேலை அனுமதிப்பத்திரம் வதிவிட அனுமதி பெறும் நடைமுறைகளை தான் இலகுபடுத்தியுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.
போரின் காரணமாக ரஷ்யாவிலிருந்து வெளியேறிய தகவல் தொழில்நுட்பவியல் நிபுணர்களால் ஏற்பட்ட வெற்றிடங்களையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான போரின் தாக்கம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பையடுத்து, ஆட்திரட்டல் திட்டமொன்றை கடந்த செப்டெம்பரில் ரஷ்யா அறிவித்தது. அதையடுத்து, பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறையில் நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகள் ரஷ்யாவில் பணியாற்றுவதற்கும் வதிவிட அனுமதிப்பத்திரம் பெறுவதற்குமான நடைமுறைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன என ரஷ்யாவின் உள்துறை அமைச்சுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறை
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் கடந்த வருடம் ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டு பல மாதங்களின் பின் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து வெளியேறிய இத்துறையைச் சேர்ந்தவர்களில் சுமார் 80 சதவீதமானோர் வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய நிறுவனங்களுக்காக பணியாற்றுகின்றனர் என ரஷ்யாவின் டிஜிட்டல் அபிவிருத்தி அமைச்சர் மக்சுத் ஷதாயேவ் கூறியிருந்தமை குறிப்பித்தக்கது.