உக்ரைன் மீது ரஷ்யாவின் கடும் வான் தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களில் ஒரு பெண் மற்றும் அவரது 10 வயது மகன் உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நேற்றைய தினம்(09.02.2026) நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
ரஷ்யா- உக்ரைன் தாக்குதல்
உக்ரைனிய விமானப்படையின் கூற்றுப்படி, ரஷ்யப் படைகள் ஒரே இரவில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 149 ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளன.
கிழக்கு உக்ரைனில் உள்ள போஹோடுக்கிவ் பகுதியில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது விழுந்த ட்ரோன் தாக்குதலில் தாயும் மகனும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

அதே போன்று, வடக்குப் பகுதியில் உள்ள செர்னிஹிவ் மாகாணத்தில் 71 வயது முதியவர் ஒருவரும், தெற்கில் உள்ள துறைமுக நகரான ஒடேசாவில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களால் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், இதனால் கடுமையான குளிருக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை
இந்நிலையில், இந்தத் தாக்குதல்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் ஒரு இறுதி முடிவை எட்ட வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் காலக்கெடு விதித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைன் நிலப்பரப்புகளின் நிலை குறித்து இரு நாடுகளும் இன்னும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை. ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என நிபந்தனை விதித்து வருகிறது, இதனை உக்ரைன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ரஷ்யாவின் குற்றச்சாட்டு
இதற்கிடையில், ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, உக்ரைனுக்கு எதிராகப் போரிடும் ரஷ்யர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மறுபுறம், ரஷ்யாவின் உளவுத்துறை அதிகாரி ஒருவரைப் படுகொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை ஐக்கிய அரபு அமீரகம் ரஷ்யாவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தப் படுகொலை முயற்சிக்கு உக்ரைனே காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ள போதிலும், அதனை உக்ரைன் மறுத்துள்ளது.
போர் நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், ஜூன் மாதத்திற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா அல்லது தாக்குதல்கள் மேலும் தீவிரமடையுமா என்பது சர்வதேச சமூகத்தின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.