மட்டக்களப்பில் பிள்ளையானால் திறந்து வைக்கப்பட்ட கிராமிய வீதி
மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலக பிரிவு உட்பட்ட நெடியமடு ஒலிமடு வீதி கிராமிய பாலம் கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் 19 மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்வு கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வானது நேற்று (01) மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சபேசன் தலைமையில் இடம்பெற்றது.
வெள்ள அனர்த்தம்
நீண்ட காலமாக இப்பகுதி விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் கிராமத்தில் வாழும் பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த கிராமிய பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த கால வெள்ள அனர்த்தங்களின் போது இப்பகுதி மக்கள் இதனைக் கடந்து தங்களது அன்றாட பணிகளையும் விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி இருந்தது
தற்போது இப்பணிகள் நிறைவடைந்து உள்ளதால் இதனை நிர்மாணித்த அரசாங்கத்துக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் பகுதி மக்கள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பு. பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.