ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி! நாட்டிற்குள் வரப்போகும் ஏராளமான டொலர்கள் - அமைச்சரின் அறிவிப்பு
டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியானது எதிர்காலத்தில் சமாளிக்கக்கூடியதாக இருக்கும் என அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (19.05.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிலிருந்து கணிசமான அளவு டொலர்கள் நாட்டிற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் அரசாங்கத்தால் இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க முடியும்.
நாட்டிற்குள் அதிக டொலர்கள் வரும்
சர்வதேச நாணய நிதியம் மேலும் 700 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளது. அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆசிய வளர்ச்சி வங்கியும் மேலும் 200 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளது. அதன் மூலம், நாட்டிற்குள் அதிக டொலர்கள் வரும்.

மேலும், இறக்குமதி கட்டுப்பாடுகள் மூலம், டொலர்களின் வெளிப்போக்கு ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்படும். மறுபுறம், டொலரின் ஏற்ற இறக்கத்தால், ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கிறது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்த மேலாண்மை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றுள்ளார்.