ஏழாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று புதன் கிழமை 07 ஆவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்று நண்பகல் 1.00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
அத்தோடு, இப்போராட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அந்த அறிக்கை மனித. உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கபபடவுள்ள அதேவேளை, இலங்கை அரசாங்கத்தால் ஐ.நா வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உலக சிறுவர் தினமாக உள்ள போதிலும் இது எமக்கு துக்க தினம் எனவும் தெரிவித்து, காணமல் ஆக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உடனடியாக நீதி வேண்டும் எனவும், செம்மணி மனித புதை குழிக்குள் மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
அம்பாறை
அத்தோடு, அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்போராட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அந்த அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கபபடவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - பாருக் சிஹான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











