உத்தேச கட்டண திருத்தம் மின்சார சட்ட விதிகளுக்கு எதிரானது: ஜனக ரத்நாயக்க
மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் தடையில்லா மின்சாரம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட, மின்சாரசபையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கூறியதை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நிராகரித்துள்ளார்.
இன்று (28.01.2023) நடந்த ஊடக சந்திப்பிலே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரின் தன்னிச்சையான செயற்பாடே தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்த குழப்பத்திற்கு காரணம்.
மின்சாரம் தடை
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் எவரும் வற்புறுத்தப்படவில்லை. இந்த நிலையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தரவுகளுக்கு இணங்க மின்சாரம் தடையின்றி வழங்கப்படாவிட்டால், மின்சாரசபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடாது என்று தமது ஆணைக்குழு கருதுகின்றது.
உத்தேச கட்டண திருத்தம்
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை எதிர்வரும் திங்கட்கிழமை கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் உத்தேச கட்டண திருத்தம் மின்சார சட்ட விதிகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.