மட்டக்களப்பில் வீடு ஒன்றை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை
மட்டக்களப்பில் வீடு ஒன்றின் ஜன்னலை உடைத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்துடன் இருந்த ஐந்து உண்டியல்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் நாவற்கேணி பகுதியிலுள்ள குறித்த வீட்டின் குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு உண்டியல் வீதம் ஐந்து உண்டியல்களில் தினமும் நூறு ரூபா வீதம் சுமார் 95 ஆயிரம் ரூபா வரை சேமித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றையதினம் இரவு 8.30 மணியளவில் அனைவரும் நித்திரைக்கு சென்ற நிலையில் அங்கிருந்த ஜன்னல் உடைக்கப்பட்டு வீட்டின் மண்டபத்தில் தொலைக்காட்சி பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த ஐந்து உண்டியல்களும் திருடப்பட்டுள்ளன.
திருட்டுச் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு வழங்கபட்ட முறைபாட்டின் அடிப்படையில் விசாரனை மேற்கொண்டதில் அருகிலுள்ள வெற்றுக்காணியில் மூன்று உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இரு உண்டியல்களை பணத்துடன் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.