கோவிட் தொற்றுறுதியாகும் நபர்களுக்கு ஏற்படும் அபாயம்
கோவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு, தொற்றுறுதியான நாளில் இருந்து 3 - 6 மாதங்களுக்கிடைப்பட்ட காலப்பகுதிக்குள் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியர் மதில்க சுமனதிலக இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கோவிட் தொற்றுக்குள்ளானோர் 6 மாதங்களின் பின்னர் குருதியில் உள்ள சீனியின் அளவினை பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள், குடும்பத்தில் எவருக்கேனும் நீரிழிவு நோய் இல்லாதவர்கள் மற்றும் இளம் வயதினர் ஆகியோரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றமை அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் மதில்க சுமனதிலக சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஒமைக்ரொன் கோவிட் திரிபில் இருந்து பாதுகாப்பு பெற பூஸ்டர் தடுப்பூசி பெற்றிருத்தல் கட்டாயமானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி பெற்றதன் பின்னர் கொவிட் தொற்றுறுதியாகுமாயின், அதன் பாதிப்புகளும் குறைவாகவே இருக்கும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.