ஹிஷாலினி விவகாரம்!ரிஷாட் வீட்டின் சிசிரீவி கெமராக்கள் தொழில்நுட்ப பிரிவினரால் தீவிர ஆய்வு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தின் பாதுகாப்பு கெமராக்களை பொலிஸ் சிசிரீவி தொழில்நுட்ப பிரிவினர் இன்று பரிசோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,சிறுமி உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ரிசாட் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 8 கமராக்களில் 6 கமராக்கள் ஏற்கனவே செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அவை செயற்பட்ட விதம் என்பன குறித்து ஆராயப்பட்டுள்ளது.
மேலும்,சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் 'என் சாவுக்கு காரணம்' என எழுதப்பட்டுள்ளமை விசாரணைக் குழுவினரால் இனங்காணப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துக்களில் தமிழ் அர்த்தம் கிடைக்கப் பெறும் வகையில் காணப்படும் இந்த வசனம் சிறுமி ஹிஷாலினியால் எழுத்தப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவர் உபயோகித்த பாடப்புத்தகங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், மூவரடங்கிய விசேட நீதிமன்ற மருத்துவ குழுவினால் இரண்டாவது பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கை வழங்கப்படவுள்ளது.
மேலும் குறித்த வீட்டில் இதற்கு முன்னர் பணியாற்றிய ஏனைய சகல பெண்களிடமும் வாக்குமூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.