மாத்திரைகளை காகிதத்தில் சுற்றி தூக்கியெறிந்ததால் சிஐடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஷாத்
மாத்திரைகளை காகிதத்தில் சுற்றி தூக்கியெறிந்ததால் ரிசாத் பதியுதீனை சிகிச்சையை நிறைவு செய்து மீண்டும் சிஐடிக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர் பரிந்துரை செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக ரிஷாத் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் ஒரு தனி கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ள நிலையில் அவர் அதைப் பயன்படுத்தச் சென்ற போதெல்லாம் சிஐடி அதிகாரிகள் அவதானத்துடன் இருந்துள்ளனர்.
அதன்படி, அவர் இன்று கழிப்பறைக்குச் சென்று போது இரகசியமாக ஒரு துண்டு காகிதத்தை தனது உள்ளங்கையில் வைத்திருந்ததை சிஐடி அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
பின்னர் ரிஷாத் கழிப்பறைக்குள் சென்று கையில் இருந்த காகிதத் துண்டை ஜன்னலுக்கு வெளியே எறிந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அதை எடுத்து பரிசோதித்த போது அதில் பல மாத்திரைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரிஷாத் தங்கியிருந்த 52ஆவது அறைக்கு பொறுப்பான வைத்தியரிடம் மாத்திரைகள் காண்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ரிஷாத்திற்கு குடிக்கக் கொடுக்கப்பட்ட மாத்திரைகளே தூக்கி எறியப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவரின் சிகிச்சையை நிறைவு செய்து மீண்டும் சிஐடிக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர் பரிந்துரைத்த நிலையில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.