கல்வித்துறை அதிகாரிகளின் நிலுவை தொகை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அனைத்து கல்வித்துறையுடன் தொடர்டபுடைய அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான நிலுவைத் தொகையையும் செலுத்துவதற்கு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,'' அதிபர், ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவையில் மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தையும், ஏனைய அனைத்து கல்வித்துறையுடன் தொடர்டபுடைய அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான நிலுவைத் தொகையையும் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நிலுவை தொகை
2025ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக 97/2 சுற்று நிரூபத்தால் ஏற்பட்ட சம்பள முரண்பாட்டை தீர்த்து தற்போதைய அரசாங்கம், கடந்த காலத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணங்கியதைப் போன்று நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
கல்வித்துறைசார் தொழிற்துறையினருக்கு 97/2 சுற்று நிரூபத்தின் மூலம் உருவான சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒற்றுமையாக போராடின.
முரண்பாடு
அதன் பிரதி பலனாக 2021ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் மாத்திரம் முரண்பாடுகளில் மூன்றில் ஒரு பகுதி கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
எனினும் அந்த சந்தர்ப்பத்திலும் கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் கல்வி சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை உள்ளிட்ட சேவைகளிலுள்ள அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய மூன்றில் ஒரு பங்கு சம்பள நிலுவை கிடைக்கப் பெறவில்லை.'' என கூறியுள்ளார்.