வவுனியாவில் காணி பிரச்சினையை தீர்க்க துரித நடவடிக்கை: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க
வவுனியாவில் 2000 குடும்பங்கள் காணி கோரி விண்ணப்பித்துள்ள நிலையில் அதனை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்தில் தான் காணிப் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. அதில் 25 வீதம் கூட தீர்க்கப்படவில்லை. பலர் வெளிநாடுகளில் வாசிப்பதும் துரிதமாக தீர்க்க முடியாமைக்கு காரணம் ஆகும்.
துரித நடவடிக்கை
அடுத்த வருடம் 80 வீதமான காணிப் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அதற்கான சிறப்பு வேலைத்திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வனவளத் திணைக்களத்தால் எல்லை இடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் 25000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும். வன்னியில் முழுமையாக 50000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. அதற்கான விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.
வனவளத் திணைக்களம், பிரதேச செயலகம், காணி அமைச்சு இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளார்கள். இது தொடர்பாக பயப்பட தேவையில்லை. மக்களுக்கு காணிகள் வழங்கப்படும். பிரதேச செயலாளர் ஊடாக காணி கோரிய 2000 குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உறுமய மீளாய்வு செய்யப்படுகிறது. அதனை சரியாக கையாண்டு மக்களுக்கு காணி உரிமத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.