கல்முனை பிரதேச கோவிட் தடுப்பு செயலணியின் தீர்மானங்கள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் -19 அசாதாரண சூழ்நிலை தொடர்பாகவும், கல்முனை பிரதேசத்தில் கோவிட்டினை முழுமையாகக் கட்டுப்படுத்துவது சம்மந்தமாகவும், பயணத்தடை நேரங்களில் மக்களின் நடவடிக்கைகள் சம்மந்தமாகவும் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டம் இன்று(1)கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசலில் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ அஸீஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் கோவிட் பரவல் நிலை அதிகரித்துள்ளதன் காரணமாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் பிரதேச மக்களினை அடிப்படையாகக் கொண்ட கோவிட் தடுப்பு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், முப்படையினர் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் கோவிட் தடுப்பு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள இச்செயலணிக்கு கல்முனை மக்கள் முற்றுமுழுதான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் இச்செயலணி பின்வரும் விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்கும் என்பதுடன், இன்று முதல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு அதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதனை அறியத்தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு எந்த தேவைகளுக்காகவும் வீதிகளில் வாகனங்களில் பயணித்தல் தவிர்க்கப்படுதல்.இளைஞர்கள் குழுக்களாகச் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வீதிகளில் வீணாகச் சுற்றித் திரிதல் தவிர்க்கப்பட வேண்டும்.
மீன் பிடிப்பவர்களைத் தவிர ஏனையோர் கடற்கரைகளில் அனாவசியமாகக் கூடி இருத்தல் தவிர்க்கப்படல் வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதிகமானோர் கூடி இருத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
வீதிகள் மற்றும் மைதானங்களில் இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுதல் தவிர்க்கப்படல் வேண்டும். சரியான முறையில் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றாதோர் கவனிக்கப்படுதல் வேண்டும்.
வெளி ஊர்களிலிருந்து யாசகம் கேட்டு வருபவர்களைத் தடை செய்தல் வேண்டும்.
போன்ற விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் கோவிட் தடுப்பு செயலணிக்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு கோவிட் நோயிலிருந்து கல்முனை பிரதேசத்தையும், எமது நாட்டையும் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை தெற்கு
சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர். எம்.அஸ்மி, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி-பொதுச் சுகாதாரம் வைத்தியர் ஏ.எல்.பாரூக்,
திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.ஹபீலுல் இலாஹி, கல்முனை பிரதேச
செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், சிரேஷ்ட பொதுச் சுகாதார
பரிசோதகர் ஏ.எம். பாரூக் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பள்ளிவாசல்களின்
நம்பிக்கையாளர் சபையினர், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்து
கொண்டுள்ளனர்.


