விமான நிலைய ஓடுதள விஸ்தரிப்புக்காக காணிகளைச் சுவீகரிக்கத் தீர்மானம் : சாகல ரத்நாயக்க
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தைச் சூழ உள்ள பகுதிகளில் விமான ஓடுதள விஸ்தரிப்புக்காக சில காணிகளைக் கையகப்படுத்தவுள்ளதோடு அதனைச் சூழ சிறு தானிய பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விமானப்படையினர் அனுமதி கோரியுள்ளதுடன் அதற்கான அனுமதியை வழங்குவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாக பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் காணிகள்
மேலும் தெரிவிக்கையில், “யுத்த காலத்தில் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக முப்படை மற்றும் பொலிஸாரால் வடக்கு மாகாணத்தில் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. மேலும் அரச திணைக்களங்களான வனஜீவராசிகள் மற்றும் வனவள திணைக்களங்களின் கட்டுப்பாட்டின் கீழ் அதிகளவான காணிகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு 2013ஆம் ஆண்டில் இருந்து மக்களிடம் காணிகளைக் கையளிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தது.
எனினும், நாட்டில் இன்னமும் விடுவிக்கப்படாமல் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகள் முப்படை மற்றும் பொலிஸார் வசம் உள்ளன.
இந்த 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் தேவையான காணிகளாகவும் அதேபோல் மக்களுக்கும் தேவையானதாகவும் உள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நாட்டைப் பொறுப்பெடுத்தபோது நாடு வங்குரோத்து நிலையில் இருந்தது. அதனால் அரசு முதலில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றி அக்கறை செலுத்தியது. அதன் பின்னர்தான் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியது.
காணிகளுக்குரிய இழப்பீடு
காணிகளை விடுவிப்பது தொடர்பில் முப்படைகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக் குழுவை குறித்த காலவரைக்குள் காணிகளை விடுவிப்பது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்புக்கு மிகவும் தேவையான சில காணிகள் தொடர்ந்தும் முப்படைகளின் கட்டுப்பாட்டிலே இருக்கும். அந்தக் காணிகள் மக்களுக்கும் தேவையானது என எமக்குத் தெரியும். எனவே, தொடர்ந்தும் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிகளுக்குரிய இழப்பீடுகளை வழங்கவும் தயாராகவுள்ளோம்.
ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது முப்படைகள் வசம் உள்ள மக்களின் காணிகளைப் பார்வையிடவுள்ளார். விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் எவ்வாறு பயண்படுத்துகின்றார்கள் எனவும் ஆராயவுள்ளார்.
உயர்மட்டப் பேச்சுக்கள்
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்களின் வீடுகளைத் தற்போது மீளக் கட்டிக்கொடுப்பது தொடர்பான பிரச்சினையும் நிலவி வருகின்றது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடும் எமக்கு உண்டு.
கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்திய - இலங்கை உயர்மட்டப் பேச்சுகள் நீண்டகாலமாக இழுபறியில் உள்ளன. இழுவைமடி கடற்றொழில் முறைமை என்பது சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத கடற்றொழில் முறைமையாகும்.
இதனால் கடலின் வளம் முழுமையாகச் சுரண்டப்படுகின்றது. மேலும், எமது கடற்றொழிலாளர்களின் வலைகள், சொத்துக்கள் அழிவடைகின்றன. எனவே, இது தொடர்பில் இராஜதந்திர மட்டக் கலந்துரையாடல் மூலம் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்" என்றும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
