ரணிலின் கைதின் பின்னணியில் அரசியல் தலையீடு - அம்பலப்படுத்தும் பேராசிரியர்
இலங்கையில் உயர் பதவியை வகித்தர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதா இல்லையா என்பது அரசியல் ரீதியான முடிவாகவே உள்ளதாக பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி(Nirmal Ranjith Devasiri) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது செய்யும் செயல்முறை அரசியல் ரீதியானது எனவும் அதை மறைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிணை வழங்கும் செயல்பாட்டில் சட்டமா அதிபர் திணைக்களம் தலையிடுவது என்பது அரசாங்கத்தின் அரசியல் தலையீடு என நிர்மல் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலையீடு
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான முழுமையான செயல்முறையும் அரசியல் தலையீடு இல்லாமல் நடக்காது என அவர் மேலும் கூறியுள்ளார்.
பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தனது சமூக ஊடக கணக்கு மூலம் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பார்வையிட அனுமதித்தால் அது பொருத்தமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை
ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு தற்போது ஓய்வு தேவை.
அவரை பார்வையிட தொடர்ந்து வருகை தருவது அதற்கு தடையாக இருப்பதாக ருக்ஷான் பெல்லன குறிப்பிட்டுள்ளார். .
ரணில் விக்ரமசிங்கவுடன் மேலும் 9 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அது அவர்களுக்கும் ஒரு தடையாக இருப்பதாகவும் மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.



