சிறீதரன் எம்.பி விடுத்த கோரிக்கை! - உடன் நிறைவேற்ற பிரதமர் உத்தரவு
கிளிநொச்சி டிப்போ சந்தியில் சுற்றுவட்டப்பாதை அமைக்க வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய சிறீதரன் எம்.பி. , டிப்போ சந்தியில் சுற்றுவட்ட சந்தியை அமைத்து சைகை விளக்குகளை பொருத்துமாறு தான் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
அத்துடன், அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை தலைவருக்கு கடிதம் எழுதியும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், தயவு செய்து அதனை நிறைவேற்றுங்கள் என அவர் இதன்போது சபையில் இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது பேசிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கிளிநொச்சி பிரதேசத்தின் போக்குவரத்து பிரச்சினைகளை உடனடியாக தீர்க்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எனக்கு இப்போது பணிப்புரை விடுத்துள்ளார், உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
அதேவேளை வடக்கில் விபத்துக்கள் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில், இராணுவ வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதாக மாத்திரம் தகவல்களை வெளியிடவேண்டாம். தென்பகுதியிலும் இராணுவ பொலிஸ் வாகனங்கள் மோதி உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே சர்வதேசத்துக்காக தவறான தகவல்களை வழங்க வேண்டாம் . இலங்கையில் நாள் ஒன்றுக்கு விபத்தினால் 8 பேர் மரணமடைகின்றனர். வருடமொன்றுக்கு 27000 விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
இவற்றில் 7000 விபத்துக்கு பாரதூரமானவையாகவுள்ளன. இவ்வாறான விபத்துக்களைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் பணிப்புரையில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இது நான்கு வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
இது தொடர்பில் சிறீதரன் எம்.பி. கூறுகையில் உடனடியாகவே நடவடிக்கை எடுத்த பிரதமருக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.
