வடக்கிலுள்ள ஆலயங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வரலாற்று பிரசித்திபெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தினை இந்திய அரசானது புனரமைத்தது போல வடக்கில் உள்ள ஆலயங்கள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய அரசாங்கம் முன்வரவேண்டும் என நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் இந்து சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது வருடம் தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லை குமரன் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தென் இந்திய ஆலயங்களுக்கு ஒத்த வகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயமானது இந்திய அரசின் நிதி உதவியுடன் கருங்கற்களால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல வடக்கில் உள்ள ஆலயங்கள் மற்றும் வடக்குக்கு தேவையான விடயங்களை நிறைவேற்ற இந்திய அரசு முன் வரவேண்டும் என இன்றைய நாளில் யாழ்.இந்திய துணைதூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கின்றேன்.அதேபோல இந்து கலாச்சார திணைக்களத்தினரால் இந்த ஆண்டு நாவலர் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாவலர் ஆண்டிலே நாவலர் இந்த மண்ணுக்கு செய்த சேவையினை நினைவு கூரும் முகமாக நாவலர் கலாச்சார மண்டபமானது புனரமைப்பு செய்யப்பட்டு புத்துயிர் பெறுவதற்குரிய நடவடிக்கையினை யாழ்.மாநகர சபையும் இந்து கலாச்சார அலுவலர்கள் திணைக்களமும் முன்னெடுக்க வேண்டும்.
அத்தோடு நல்லை
குமரன் மலர் நூல் வெளியீட்டுக்கு யாழ்.மாநகர சபை உறுப்பினர்களும் அதற்குரிய
பங்களிப்பினை வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.