குமுழமுனை காணியை விடுவிக்குமாறு மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை
1970 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு மரமுந்திரிகைகள் நாட்டப்பட்ட முல்லைத்தீவு, குமுழமுனை காணியை விடுவித்துத் தருமாறு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமுழமுனை மேற்கின் கரடிப்பூவல் பகுதியில் 500 ஏக்கர் மர முந்திரிகை காணி இவ்வாறு விடுவிக்கப்படாமல் உள்ளது. 2010 ஆம் ஆண்டில் இருந்து குறித்த காணியை விடுவிக்கும் படி காணியின் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், கரைதுறைபற்று பிரதேச செயலாளர், வனவளத் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகள் காணியைப் பார்வையிட்டு விரைவில் விடுவிப்பதாக வாக்குறுதிகள் வழங்கியிருந்தனர்.
எனினும், காணிக்கான ஆவணங்கள் மக்களிடம் உள்ள போதிலும் காணி விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. காணிக்கு செல்கின்ற வீதியில் இராணுவ முகாம் இருப்பதன் காரணமாக இராணுவ முகாமைத் தாண்டி காணிக்குரியவர்கள் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.
எனவே, இந்த மரமுந்திரகை காணியை விடுவிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்
நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குமுழமுனை மேற்கு மக்கள் வேண்டுகோள்
விடுக்கின்றனர்.