ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் சஜித்திற்கு இடையில் சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் இருதரப்பினரும் நீண்ட நேரம் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
GSP+ சலுகையை மேலும் மேம்படுத்துவதில் தனது கரிசனையை வெளிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் ஆடைகள் உட்பட ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், அமெரிக்கா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 44% பரஸ்பர வரியின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் அதன் மூலம் முடியுமாக இருக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கலந்து கொண்டவர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் காவிந்த ஜயவர்தன, எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம, பேராசிரியர் கெனடி குணவர்தன, பேராசிரியர் சந்திமா விஜேகுணவர்தன, மஹிம் மெண்டிஸ், அதுலசிறி சமரகோன், கலாநிதி நதீஷா டி சில்வா, சுரங்க ரணசிங்க, குசும் விஜேதிலக மற்றும் திலும் அழகியவன்ன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno), ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்தியத் தலைவர் சார்ள்ஸ் வைட்லே, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் துணைத் தலைவர் லார்ஸ் பிரெடெல், ஐரோப்பிய ஆணையத்தின் கொள்கை அதிகாரி கைடோ டொலாரா, ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி கலிஜா அகிசேவா, ஐரோப்பிய ஆணையத்தின் கொள்கை அதிகாரி பார்டோஸ் விளாடிஸ்லாவ் ஒட்டாச்செல் மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் கொள்கை அதிகாரி திருமதி மைக்கேல் டோடினி உள்ளிட்டவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |