மனித உயிர்களை வேட்டையாடும் மதவாதம் : என்று தணியும் இந்த கொலைவெறி ஆட்டம்
இந்த உலகம் நாகரீகத்தில் வளர்ச்சி காண ஆரம்பித்த காலம் முதல் நாகரீகம் தாண்டி மதம், சாதி, இனம் என்ற மற்றுமொரு பாதையிலும் உலக மக்கள் தீவிரமாக பயணித்துக் கொண்டிருந்தனர்.
அது காலப்போக்கில் பல யுத்தங்களுக்கும் பேரழிவுகளுக்கும், மனித இனம் மண்ணோடு மண்ணாக புதையுண்டதற்குமே வழிவகுத்தது.
மதங்கள் என்றுமே மனிதத்தைத் தான் போதித்து வந்திருக்கின்றன. அதைப் பின்பற்றும் மனிதரிடத்தில்தான் மனிதம் இறந்து ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்துவிட்டது.
கிறிஸ்தவத்தை போதிக்கும் பைபிளும், இஸ்லாத்தை போதிக்கும் அல்குர் ஆனும், இந்துக்களின் கீதையும் எந்த இடத்தில் கூறியிருக்கின்றது சக மனிதனை புசித்து உண்பாயாக என்று.
இந்த உலகத்தில் நடந்த அழிவுகள் பலவற்றிற்கு பிரதான காரண கர்த்தாவாக மதமும், இனமும், சாதியுமே தலைமை தாங்கியிருக்கின்றன.
மதத்தின் பெயரால் கொடூர கொலைகளும், சாதியின் பெயரால் வஞ்சிக்கப்படுதலும், இனத்தின் பெயரால் ஒதுக்கப்படுதலும் ஒவ்வொரு நாளும் உலகத்தின் ஒவ்வோர் மூலையின் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன. இலகுவாக நாம் இதனை கடந்து சென்று விட முடியாது..
மிக அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் நமக்கு பல படிப்பினைகளை கொடுத்திருந்தாலும் கூட அந்த படிப்பினைகள் அந்த நேரத்தைத் தவிர அடுத்த சமயம் தற்கொலை செய்து கொள்கின்றன.
கடந்த வருடம் உலகத்தையே உலுக்கிய ஜோர்ஜ் ப்ளாய்ட் படுகொலை, உலகத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
2020 மே 25 ஆம் திகதி மினசோட்டா மாகாணத்தி பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி 20 டொலர் கள்ளநோட்டினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஜோர்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க வரலாற்றில் இனவெறி பாரம்பரியத்தின் தொடர்ச்சியை எடுத்துக்காட்டியது.
எனவே ஜோர்ஜ் பிளாய்ட் மீதான படுகொலை ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் மீதான குற்றச்சாட்டை இனவெறிக்கான நியாதிக்கம் என்று குறிப்பிடுவதை விட வெள்ளை இனத்தவர்களின் ஆதிக்கத்தின் இன்னொரு அடையாளம் என குறிப்பிடுவது பொருத்தமாகும். இவை நாம் அறிந்தவற்றில் அதிக சர்ச்சைக்குள்ளும் பிரபலமாகவும் பேசப்பட்ட ஒருவிடயம்.
அதேபோன்றதொரு நிலை தற்போது பாகிஸ்தானில் அரங்கேறியிருக்கின்றது. இலங்கையில் இருந்து பாகிஸ்தானிற்கு சென்று பணி புரிந்து வந்த நிலையில் இஸ்லாத்திற்கு எதிரான மத நிந்தணை செய்ததாக தெரிவித்து 40 பிரியந்த குமார என்பவர் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2012ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிலுள் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார்.
பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக முக்கியக் குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சியால்கோட் நகரில் வாசிராபாத் சாலையில் இலங்கையர் தாக்கி, எரிக்கப்படும் நிகழ்வைக் காட்டுவதாகக் கூறி பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை காலை தகவல் பரவியது. தொழிற்சாலையில் இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு, திரண்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் பிரியந்த குமார தியவடனவை உடல் ரீதியான துன்புறுதலுக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்றனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த முகமது பஷீர் என்பவர் பிபிசிக்கு கூறியுள்ளார்.
நூற்றுக் கணக்கானோர் ஒன்று திரண்டிருந்தநேரத்தில், இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 11.35 மணியளவில் மீட்புதவி துறையினருக்கு இந்த நிகழ்வு தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அவர்கள் அங்கு செல்லும் முன்னரே பிரியந்த குமார தியவடன எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியந்தவுக்கு எதிராக அன்று காலையில் இருந்தே செய்திகள் பகிரப்பட்டு வந்தாலும் முற்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்திற்கு பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வந்தாலும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இரு பிள்ளைகளுக்கும் அந்த கண்டனங்களாலும் நட்டஈட்டினாலும் அவரது இழப்பை ஈடு செய்து விட முடியுமா.
கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து குறித்த தொழிற்சாலையில் உயர் பதவியொன்றில், உரிமையாளருக்கு அடுத்த இடத்தில் பணியாற்றக் கூடிய ஒருவரை மதத்தின் பெயரால் படுகொலை செய்வார்கள் எனில் அந்த மதம் போதித்தது இவற்றைதானா என்ற கேள்வி எம்மிடத்தில் எழலாம்.
கைது செய்யப்பட்டும், கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும் நேர்ந்த இழப்புக்கு ஈடு செய்ய முடியுமா? பிரதானமாக அனைத்து மதங்களுமே நம்மைப் போல பிறரையும் அன்பு செய்க என்பதைத் தானே பிரதானமாக போதித்து வருகின்றன.
பிறரைக் கொன்று நாம் வாழலாம் என்றோ, நமது மதத்திற்காக எத்தனை கொலைகளையும் செய்யலாம் என்றோ எந்த மதமும் போதிப்பதில்லை.
இலங்கையை வதைத்த முப்பது வருடக் கால யுத்தமும் கூட தனிப்பட்ட இனத்தின் மீது இழைக்கப்பட்ட கொடூரச் செயலாகவே பார்க்கப்படுகின்றது. இலங்கையில் மாத்திரம் அல்ல நாம் அறிந்த அண்மைய யுத்தங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இனத்திற்காகவோ மதத்தின் பெயரால் தான் நடத்தப்பட்டிருக்கின்றன.
இன்று பாகிஸ்தானில் பிரியந்த குமாரவை காப்பாற்ற முயற்சித்தவருக்கு உயரிய விருது வழங்கப்படுகின்றது. தற்காலத்தில் மனிதநேயமும் இதைப் போலத்தான். விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டிய இடத்தில் தான் மனிதநேயம் மக்களிடத்தில் இருக்கின்றது.
மதமும், இனமும், மொழியும் உயிர்களை வாழ வைப்பதற்காகவே அன்றி உயிர்களை புசித்து உண்பதற்கு அல்ல..