மட்டக்களப்பில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் வெளியான தகவல் (Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும், ஆறு சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு நேற்று முன் தினம் (21.01.2023) அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று (22.01.2023) வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நேரத்தை கடந்து வந்ததற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஈரோஸ் ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 உள்ளூராட்சி மன்றங்களிலும் இம்முறை அரசியல் கட்சிகள் 121 இடங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. இதில் 23 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளன.
அவற்றில், போரதீவுப்பற்றில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்முனை தென் மேற்கு பிரதேசசபைக்கான வேட்புமனுவில் தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு நிராகரிப்பு
காத்தான்குடி நகரசபைக்கான வேட்பு மனுவில் ஐக்கிய காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் சிலரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்....
மட்டக்களப்பு மாவட்டத்தில் 145 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 6 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தெரிவத்தாட்சி ஆணையானர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இருகட்சிகளும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
145 வேட்பு மனுதாக்கல்
தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, ஜக்கிய தேசிய கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் பல சுயேச்சைக் குழுக்கள் உட்பட 145 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.
வேட்பு மனுவில், கோறளைப்பற்று பிரதேச சபையில் விமலசேன லவக்குமார் தலைமையிலான சுயேட்சைக் குழுவில் ஒருவரும், கோறளைப்பற்று வடக்கில் அகில இலங்கை தமிழர் மகாசபை 2 பேரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், காத்தான்குடி நகரசபையில் ஜக்கிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் ஒரு வேட்பாளரும், அதேநகர சபையில் தேசிய காங்கிரஸ் 11 வேட்பாளர்களும், மட்டக்களப்பு மாநகர சபையில் ஐக்கிய தேசய கட்சி வேட்பாளர் பட்டியில் இருந்து 9 பேரும், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒருவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3 வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தல்
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
இந்த நிலையில், வேட்பு மனுதாக்கல் கடைசி தினமான நேற்று பகல் 12 மணிக்கு முடிவடைகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 12.15 மணிக்கு கச்சேரிக்கு வந்த நிலையில் அவர்களை உள்விடவில்லை.
அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சியினர் வேட்பாளர் பட்டியல் தயாரித்து அதனை கொழும்பில் இருந்து அன்றைய தினம் மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்த நிலையில் வாகனம் விபத்தினால் 2 மணிக்கே கச்சேரிக்கு வரமுடிந்த காரணத்தினால் அவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்யமுடியாமல் போயுள்ளதாக கட்சியின்மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.