பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன் தொடர்பான விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கடிதத்தின் நகலை வழங்குமாறு கேட்டு அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதிக்குத் தான் உட்சபட்ச அதிகாரம் உள்ளது என்பதால் அது தொடர்பான கோரிக்கை மற்றும் அமைச்சரவை தீர்மானம் ஆகியவற்றை நிராகரிப்பதாக கடந்த ஜனவரி 25 ஆம் திகதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தபோது, இந்த விவகாரத்தில் பல்நோக்கு விசாரணை என்பது முடியும் வரை எந்தவிதமுடிவும் தன்னால் எடுக்க முடியாது என தமிழக ஆளுநர் தரப்பில் கடிதம் மூலம் தகவல் அனுப்பி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதிக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது, தனக்குக் கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
இவை இரண்டும் முரண்பட்ட தகவல்களாக உள்ளன. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாக்கல் செய்துள்ள கடிதத்தின் நகலை எங்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பாலி நாரிமன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பிரதான வழக்கோடு இணைத்து விசாரிக்கப்படும்'' என உத்தரவிட்டனர்.