கோவிட் சடலங்களை தகனம் செய்ய அறவீடு செய்த பணத்தை மீளளிக்கவும் – உபுல் ரோஹன
கோவிட் பெருந்தொற்று காரணமாக மரணித்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு அறவீடு செய்யப்பட்ட கட்டணங்களை மீள செலுத்த வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கோவிட் சடலங்களை தகனம் செய்ய சில உள்ளுராட்சி மன்றங்கள் பணம் அறவீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஏற்கனவே நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது. கோவிட் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு சில உள்ளூராட்சி மன்றங்கள் கட்டணம் அறவீடு செய்கின்றது.
இதனால் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டுள்ளது. சில கிராமங்களில் சடலங்களை தகனம் செய்ய மக்கள் பணம் சேர்த்துக் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
மிகவும் சிரமப்பட்டு பணம் செலுத்திய குடும்பங்களுக்கு அந்தப் பணத்தை மீள அளிக்க வேண்டும். அவ்வாறு மீள பணத்தை அளிப்பது வறிய குடும்பங்களுக்கு நிவாரணமாக இருக்கும்.
கோவிட் சடலங்களை தகனம் செய்வதில் சில மலர்ச்சாலைகள் பல்வேறு வழிகளில் தலையீடு செய்கின்றன. அதனை முழுமையாக நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மக்களின் நெருக்கடிகளை தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.