சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகள் மீட்பு
மட்டக்களப்பு - சந்திவெளிப் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகள் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்திவெளி சித்திவிநாயகர் ஆலயத்திற்குப் பின்புறமாகவுள்ள களப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வாகனமொன்றில் ஏற்றிக் கொண்டிருந்த தேக்கு மரக்குற்றிகளே இவ்வாறு நேற்று காலை கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினரே இந்த மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது சுமார் நான்கரை இலட்சம் ரூபா பெறுமதியான 24 தேக்கு மரக்குற்றிகள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மரங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.