கரடியனாறு வயல்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் விவசாயி சடலமாக மீட்பு(Photo)
மட்டக்களப்பு - ஈரக்குளம் வயல் பகுதியில் கொட்டகை ஒன்றில் வேளாண்மையைக் காவல் காத்துவந்த விவசாயி ஒருவர் வெட்டுக்காயங்களுடன்; உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரளக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான 54 வயதுடைய பரசுராமன் ஆறுமுகம் என்றவரே இவ்வாறு சடலமாக நேற்று(14) மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வயல் பகுதியில் உள்ள வேளாண்மை செய்கையைக் காட்டு மிருகங்களிலிருந்து பாதுகாப்பதற்காக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வயல்பகுதியில் அமைந்துள்ள கொட்டகைக்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்றவர் திங்கட்கிழமை வீடு திரும்பாத நிலையில் அவரை தேடியபோது கொட்டகையில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸ் தடயவியல் பிரிவு அழைக்கப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.