ரஞ்சன் சிறை செல்வதற்கு சஜித்தும், சம்பந்தனுமே காரணம் - மஹிந்தானந்த அலுத்கமகே
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறை செல்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தலைவர் சம்பந்தனுமே காரணம் என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சனுக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து இன்றைய தினம் நாடாளுமன்றில் பேசிய போது அதனை குறுக்கீடு செய்து பேசிய மஹிந்தானந்த அலுத்கமகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தம்மை அனைத்து தரப்பினரும் கைவிட்டு விட்டதாக ரஞ்சன் ராமநாயக்க தம்மிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
103 பேர் சாட்சியமளிக்க இருந்த போதிலும் 3 பேரின் சாட்சியங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டதாகவும் தனது தேவைக்காக ரஞ்சனை சஜித் பலிக்கடாவாக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சஜித் பிரேமதாசவே ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சட்டத்தரணியை ஒழுங்கு செய்து கொடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ரஞ்சனின் சார்பில் வாதாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சனை சிறையில் அடைத்து இந்த வழக்கு விவகாரத்தை ஜெனீவா வரை எடுத்துச் சென்று பிரபல்யம் தேடவே எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிப்பதாக அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயங்களை ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் நீதிமன்றில் வைத்து தம்மிடம் கூறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சாட்சியங்கள் அழைப்பது நீதிமன்றின்பணி எனவும் தாம் ரஞ்சனின் சட்டத்தரணி கிடையாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை எனவும் போலியானவை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் ஹன்சார்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரியுள்ளார்.