நீட்சிபெற்றுள்ள தமிழர்கள் மீதான இனவழிப்பு: ரவிகரன் எம்.பி காட்டம்
தமிழ்த் தேசிய இனத்தின் மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இனவழிப்பு செயற்பாடுகள், தற்போது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளாக நீட்சிபெற்றுக் காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டுச் சந்திப் பகுதியில் நேற்று(14.08.2025) இடம்பெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்தகால அரசாங்கங்கள் மிக அதிகளவில் ஆக்கிரமிப்பக்களையும், அபகரிப்புச் செயற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டிருந்தன. தற்போதைய அரசும் அந்த நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு அரசாகத் தெரியவில்லை.
கோட்டாபய துரத்தியடிக்கப்பட்ட வரலாறு
எமது மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுமெனக் கூறுகின்றார்களே தவிர விடுவிப்பதாகத் தெரியவில்லை.
அந்தவகையில், தற்போது நாம் செஞ்சோலைப் படுகொலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதற்கு கூடியிருக்கின்றோம்.
இத்தகைய படுகொலைகளைச் செய்தவர்களுக்கு இறைவனால் உரிய தீர்ப்புக்கிடைக்கும் என நம்புகின்றோம். குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச பேராதரவுடன் ஆட்சிப்பொறுப்பேற்று அந்த மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்ட வரலாறுகளை நாம் கண்டிருக்கின்றோம்.
எனவே, தமிழ்த்தேசிய இனத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்ட, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை மேற்கொள்கின்றவர்கள் அதற்கு உரிய பொறுப்புக்கூறலை கூறுகின்ற காலம் வரும். உரிய தீர்வுகிட்டும். அதற்காக நாம் அனைவரும் காத்திருப்போம்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




