இராவணத் தாழிசை! சிவபக்தன் இராவணன் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்(Video)
நேற்று மகாசிவராத்திரி. இராமாயணத்தில் அரக்கனாகவும் தீயவனாகவும் சித்தரிக்கப்படும் இராவணன் உண்மையில் பெரும் சிவபக்தன் என்பதும் பேரறிஞன் என்பதும் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இராவணன் பெரும் புலவனாகவும் இசை அறிஞனாகவும் இருந்தான்.
பெரும் சக்தி வாய்ந்த சிவ தாண்டவ தோத்திரம் இராவணனால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் நிபுணனாக விளங்கிய இராவணன் பல ஆயுர்வேத நூல்களையும் எழுதியிருக்கிறான்.
நிர்வாகத் திறமை மிகுந்த அரசனாகவும் இராவணன் போற்றப்படுகிறான். இராவணனை இவ்வகையில் சித்தரிக்கும் அழகிய இசைக் காணொளியொன்று நேற்று வெளியாகியுள்ளது.
தாழிசை என்ற செய்யுள் வடிவத்தில் பாவலர் மதுரத் தமிழவேளால் எழுதப்பட்ட இந்தப் பாடலை இங்கே பார்க்கலாம்: https://youtu.be/nvRHNwMXmZQ
இராவணனை வீழ்த்திய பிறகு அவன் உயிர் போவதற்கிடையில் அவனிடம் சென்று உபதேசம் பெற்று வா என்று இராமன் இலட்சுமணனிடம் அறிவுறுத்தியதாக இராமாயணம் சொல்கிறது.
புராணங்களில் இலங்கை எல்லா வளங்களும் நிறைந்த அழகிய நகரமாகச் சொல்லப்படுகிறது. இலங்காபுரி தேவர்களின் கட்டிடக்கலைஞரான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட நகரம்.
தேவர்களின் பொருளாளரான குபேரன் அங்கு வசித்து வந்தான் என்றும் இராவணன் அவனிடமிருந்து இலங்கையைப் பலவந்தமாக அபகரித்தான் என்றும் சொல்லப்படுகிறது.
ஒரு புராணத்தின் படி, இராவணன் தனது தாயை மகிழ்விப்பதற்காகச் சிவபெருமான் வாழும் கைலாச மலையை இலங்கைக்கு கொண்டு வர முடிவு செய்தான்.
அவன் மலையைத் தூக்க முயன்றபோது, சிவபெருமான் அவரது ஆணவத்தால் கோபமடைந்து தனது கால் பெருவிரலை கைலாசத்தின் உச்சியின் மீது ஊன்றினார். இராவணனின் பத்துத்தலைகளும் மலைக்கிடையில் சிக்கிக்கொண்டன.
சிவனை மகிழ்விப்பதற்காக, இலங்கை வேந்தன் தனது ஒரு கையையும் ஒரு தலையையும் அறுத்துப் புதியவோர் இசைக்கருவியை உருவாக்கினான்.
தந்திகளை உருவாக்க நரம்புகளைக் கிழித்தான். சிவபெருமான் அவரது இசையில் மிகவும் மகிழ்ந்தார், அவர் அவரை மன்னித்தார் என கூறப்படுகின்றது.