சஹ்ரான் குழுவுக்கு வெடிபொருட்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ராசிக்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பாக ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அங்குனுகொலபெலஸ்சவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையில் ஏராளமான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் காத்தான்குடியைச் சேர்ந்த ராசிக் ராசா என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் ரில்வான், கடந்த 2018 இல் வெடிக்கும் சாதனமொன்றை பரிசோதிக்க முயன்றபோது காயமடைந்தார்.
இந்த சம்பவம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது. மேலும் வெடிபொருட்களை யார் சோதனைக்கு கொண்டு வந்தார்கள், சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் கல்முனையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முகமது ரில்வான் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு நீண்ட விசாரணைகளை நடத்தியது.
இந்த விசாரணையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் யார்?, வெடிக்கும் சோதனைக்கான மூலப்பொருள் வழங்கியவர்கள் யார்? உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் காந்தான்குடியில் வசிக்கும் 28 வயதான ராசிக் ராசா, ரில்வானுடைய பரிசோதனைக்கு உதவியதாக நீண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், பயங்கரவாத பிரிவு, நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாதிகள் எவ்வாறு திட்டமிட்டார்கள் என்பது பற்றி அவருக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே அவரை பயங்கரவாத தடுப்புப்பிரினர் தொடர்ந்து தடுத்துவைத்து விரிவான விசாரணைகளை முன்னனெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.