மிக விரைவில் விடுதலையாகும் ரஞ்சன் ராமநாயக்க
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மிக விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இது தொடர்பான சூசகமான தகவலை வெளியிட்டுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கும் நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.
தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் வரை இந்த வீட்டை ரஞ்சன் ராமநாயக்க பயன்படுத்தும் வகையில் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க மிக விரைவில் விடுதலையான பின்ன அவர் இந்த வீட்டில் வசிக்க முடியும் எனவும் நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது பயன்படுத்தி வீட்டையே மனுஷ நாணயக்கார தனக்கு கேட்டு பெற்றுக்கொண்டதுடன் அதனை ரஞ்சன் ராமநாயக்கவிடம் மீண்டும் வழங்கியுள்ளமை முக்கியமான விடயமாகும்.
அதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் ஜனாதிபதியும் அதற்கு சாதகமான பதிலை வழங்கி இருந்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை வழங்க தேவையான ஆவணங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்திருந்தார்.
இந்த ஆவணங்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு கிடைத்ததுடன் அவர் வசிப்பதற்கு தனது வீட்டை வழங்குவதாக பிரபல அழகு கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்திருந்தார்.