ரணிலின் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை! சந்திம வீரக்கொடி
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என்று சந்திம வீரக்கொடி எம்.பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அமைதி வழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கையாண்ட ரணில் தலைமையில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் நாங்கள் அதில் இணைந்து கொள்ளமாட்டோம்.
மக்கள் விரோதப்போக்கு அதிகரிப்பு
தற்போதைக்கு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்காக சேவை செய்வது மட்டுமே எங்கள் நோக்கமாக உள்ளது. இந்த அரசாங்கம் ஆரம்பத்திலேயே மக்கள் விரோதப் போக்கைக் கையாண்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை சிதறடித்துவிட்டது.
அவ்வாறான ஒரு அரசாங்கத்தில் இணைந்து கொள்வதை விட எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பானது என்றும் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி வகித்த காலத்திலேயே அவரும் கோட்டாபயவும் பதவி விலகி சர்வ கட்சி அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களில் சந்திம வீரக்கொடி முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது



