நாடாளுமன்றத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்க
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திருத்தம் ஒன்றை கொண்டு வர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
இதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முழு அமைச்சரவைக்கும் எதிராக கொண்டு வரப்படும் பிரேணையாக மாற்றும் யோசனையை ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படியான யோசனையை முன்வைக்கும் போது அதனை மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆமோதிக்க வேண்டும்.
இந்த யோசனையை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் ஆமோதிக்க முடியாது என்பதால், எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஆமோதிக்க வேண்டும்.
எனினும் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆமோதிக்க முன்வரவில்லை.
இதனால், ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை நிராகரிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பகிரங்கமாக கூறியிருந்த போதிலும் அப்படியான ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் முன்வரவில்லை என்பது உறுதியானது.
சிறிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருந்தது.
எங்கே அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டதாக தெரியவருகிறது.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முதல் நாள், ஐக்கிய மக்கள் சக்தியினர் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்திருந்தனர்.