எதிர் கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே - சபையில் தனியாளாக உரையாற்றிய ரணில்
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினரின் சண்டித்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாது புறக்கணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இன்றைய தினம் தனியாக நாடாளுமன்றத்திற்கு வந்து அவையில் அமர்ந்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை சம்பந்தமான விடயங்கள் பற்றி எதனையும் கூறாது, மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சான் சூகியை சிறையில் அடைத்துள்ளமை மற்றும் அந்நாட்டின் இராணுவ ஆட்சி சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரணில், முதலில் நான் மியன்மாரின் நிலைமை தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக சூகி உட்பட ஏனையோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மியன்மார் தேர்தலில் சூகியின் கட்சியே வெற்றி பெற்றது. அவரே அந்நாட்டுக்கு ஜனநாயகத்தை கொண்டு வந்தார். மியன்மாரின் முதலாவது பிரதமர் ஆங் சான்னின் புதல்வி. இந்த நேரத்தில் நாம் அமைதியாக இருக்க முடியாது.
ஆசியான் நாடுகளும் இது சம்பந்தமாக செயற்பட்டுள்ளன. ஆசியான் நாடுகள் தமது கூட்டங்களுக்கு மியன்மார் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கவில்லை.
பகிரங்கமாக இல்லாவிட்டாலும் மியன்மாரின் நிலைமை குறித்து பௌத்த நாடு என்ற வகையில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும். இதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு சபை முதல்வரிடம் கோருகிறேன் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்