ரணில் - சஜித் இணைவு வரவேற்கத்தக்கது:இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவிப்பு
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது காலத்தின் கட்டாயம்.
முக்கிய விடயங்கள்
இது இதற்கு முன்னரே நடந்து இருக்க வேண்டும். இவ்வாறு நடந்து இருந்திருந்தால் அனைவருக்கும் நன்மை பயக்கும் விடயங்கள் நடந்திருக்கும்.
எனினும் கடந்த காலங்களில் இரு தலைவர்கள் மத்தியிலும் காணப்பட்ட தலைமைத்துவம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களில் விட்டுக்கொடுப்பற்ற நிலைமையால் அந்த முயற்சிகள் கைகூட முடியாது போயிருந்தது.
இவ்வாறு இணைந்து இருந்திருந்தால் முன்பு நடைபெற்ற பல்வேறு தேர்தலில் பல வெற்றிகரமாக சம்பவங்களை சந்தித்து இருக்கலாம்.
பேச்சு வார்த்தை
தற்போது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து இரு தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.அதனை நாம் முழுமையாக வரவேற்பததோடு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம்.

இது விரைவிலேயே நடைபெற வேண்டும் என நாங்கள் இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.
அடுத்து வருகின்ற தேர்தல்களை கையாள்வதற்கு இவ்விரு கட்சிகளும் இணைந்து உரிய தலைமை வகித்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |