ரணிலின் மீள் அரசியல் பிரவேசம்! எதிர்க்கட்சிகளிடத்தில் உற்சாக வரவேற்பு..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் மீள்வருகையானது, எதிர்க்கட்சிகளுக்குப் பாரிய பலமாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் மீள் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிவிதுரு ஹெலஉருமய தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில மேற்கண்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரணிலின் அரசியல் களம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த காலங்களில் பொதுவெளியில் பகிரங்கமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டாதபோதும், ரணில் விக்ரமசிங்க அரசியல் களத்தை விட்டு முற்றாக ஒதுங்கியிருக்கவில்லை.
நாங்கள் பல்வேறு தடவைகள் நேரிலும், தொலைபேசி வழியாகவும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளோம். அடிக்கடி சந்தித்துக் கொண்டுள்ளோம்.

அந்த வகையில் அவர் ஆர்ப்பாட்டமின்றி அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். தற்போது மீண்டும் பொதுவெளி அரசியல் செயற்பாடுகளுக்குத் திரும்பி வர உத்தேசித்துள்ளார்.
அது உண்மையில் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை பெரும் பலமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.