ரணிலுக்கு எதிராகத் தோண்டும் குழி! அநுர - ஹரிணிக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கே எதிர்காலத்தில் வினையாக முடியும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதியின் பாதுகாப்பு
"ஒரு ஜனாதிபதியின் பயணங்களையோ அல்லது அவரது அன்றாட வாழ்வையோ 'உத்தியோகபூர்வமானது' மற்றும் 'தனிப்பட்டது' எனத் தனித்தனியாகப் பிரிக்க முடியாது. ஒரு ஜனாதிபதி என்பவர் 24 மணிநேரமும் பணியில் இருப்பவர். அவர் விடுமுறையில் இருக்கும் போது கூட அரச தீர்மானங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.

எனவே, ஜனாதிபதியின் பயணம் உத்தியோகபூர்வமானதா, இல்லையா என்ற விவாதம் தேவையற்றது.
ஜனாதிபதி ஒருவர் தனது தனிப்பட்ட பயணத்தின் போது உத்தியோகபூர்வ வாகனத்தையோ அல்லது பாதுகாப்பையோ பயன்படுத்த முடியாது என்று வாதிடுவது ஆபத்தானது. அவ்வாறு செய்தால், ஜனாதிபதியின் எதிரிகள் அவரது தனிப்பட்ட பயணங்களின் போது தாக்குதல் நடத்துவது எளிதாகிவிடும்.
ஜனாதிபதியின் பாதுகாப்பு என்பது அவரது பதவிக்குரியது, அது அவர் செல்லும் இடத்தைப் பொறுத்தது அல்ல. ரணில் விக்ரமசிங்க லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றது ஒரு தனியார் நிகழ்வு என அரச தரப்பு வாதிடுகின்றது.
அரசியல் சார்ந்த பயணங்கள்
அவ்வாறாயின், பிரதமர் ஹரிணி அமரசூரிய உலகப் பொருளாதார மாநாட்டுக்குச் சென்றமையும் ஒரு தனியார் நிறுவன நிகழ்வாகும்.
இந்த முன்மாதிரியின்படி பார்த்தால், பிரதமர் பொது நிதியைப் பயன்படுத்தியது தண்டனைக்குரிய குற்றமாகிவிடும். அதேபோல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பான் சென்றமையும், அனுராதபுரத்துக்குச் சென்றமையும் அரசியல் சார்ந்த பயணங்களாகும்.

அங்கும் அவர் உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் பாதுகாப்பையே பயன்படுத்தினார். ரணில் விக்ரமசிங்கவைப் பழிவாங்குவதற்காக நீங்கள் எடுக்கும் இந்தச் சட்ட நடவடிக்கை, உங்களுக்கே நீங்கள் தோண்டிக் கொள்ளும் குழி போன்றது.
இந்த முன்மாதிரியால் ரணில் விக்ரமசிங்க சிறையிலிருக்கும் காலத்தைப் போல் மூன்று மடங்கு காலம் நீங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 18 மணி நேரம் முன்
நிலாவிற்காக கடும் வருத்ததில் சேரன், சோழன், நடேசன், என்ன ஆச்சு... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri