ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இடைநிறுத்துமாறு ரணில் மனுத்தாக்கல்
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் பழிவாங்கல் சம்பவங்களை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இடை நிறுத்தக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவைக் கோரிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரனவின் ஊடாக இந்த மனுவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி குறித்த பரிந்துரைகளில் தமது விடயம் தொடர்பான 17 முதல் 51 ஆம் பக்கங்களில் உள்ள கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளின் செயல்பாட்டை இடைநிறுத்த, மனுதாரர் இடைக்கால உத்தரவை கோரியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதியரசர் சந்திரசிறி ஜெயதிலக மற்றும் முன்னாள் காவல்துறை அதிபர் சந்திர பெர்னாண்டோ, ஆணைக்குழுவின் செயலாளர் முத்து வீரசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2020 செப்டம்பர் 4 ஆம் திகதி தாம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமானதாக தெரிவித்துள்ள மனுதாரரான ரணில் விக்கிரமசிங்க, ஆணைக்குழுவினால் தாம் ஒரு பிரதிவாதியாக கருதப்படவில்லை, ஒரு சாட்சியாக மட்டுமே நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே சாட்சியான தனக்கு எதிராக எந்த கண்டறிதல்களும், பரிந்துரைகளும் செய்யப்பட வாய்ப்பில்லை. எனினும், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், தம்மை பற்றிய கண்டறிதல்களும் பரிந்துரைகளும் உள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஆணைக்குழு, இயற்கை நீதி விதிகளை முற்றிலுமாக மீறியுள்ளதாக தெரிவிக்கும் மனுதாரர், விசாரணையின் போது தமக்கு சரியான விசாரணை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே, தமக்கு எதிராக சேகரிக்கப்பட்ட கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகள் நியாயமற்றவை, பகுத்தறிவற்றவை என்று மனுதாரரான ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.