பிரதமராக பதவியேற்றவுடன் தமிழ் அரசியல் தலைவர் ஒருவரை அழைத்து ரணில் கூறிய தகவல்
ரணில் விக்ரமசிங்க பிரதமராகியவுடன் என்னை அழைத்து தனது அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும்படி கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு என் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. அதனை பொறுப்புடன் கூற விரும்புகிறேன். ஆனால் அதனை நான் நட்பு ரீதியாக மறுத்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணிலுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்
ரணில் எனக்கு புதியவர் அல்ல. 20 வருடங்களாக நான் அவருடன் செயற்பட்டிருக்கின்றேன். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கின்றது. ஆனால் இன்றைய கட்டத்தில் இந்த அரசாங்கத்தின் தலைவர் அதிகாரபூர்வமாக கோட்டாபய ராஜபக்ச ஆவார்.
அதனால் எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அதனால் ரணிலுக்கு நாங்கள் இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்திருக்கின்றோம். இதனை நான் தெளிவாக சஜித் பிரேமதாசவிடமும் தெரிவித்திருக்கிறேன். ரணிலுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறேன்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல்
விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். காரணம் புதிய மக்கள் ஆணை பெறப்படவேண்டும். தேர்தலின் மூலமாக வரப்படுகின்ற அரசாங்கமே ஸ்திரமான அரசாங்கமாக இருக்கும். சட்டபூர்வமான அரசாங்கமாக இருக்கும்.
சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கின்றனர். அது சரிவராது என குறிப்பிட்டுள்ளார்.