நீதியின் ஓலம் - சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி
“சர்வதேச விசாரணை தேவை” என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று(17.08.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.
இன்று(17) காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமான போராட்டம், வடக்கு - கிழக்கைச் சேர்ந்த மக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
பேரணியாக சென்று மனு கையளிப்பு
அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி பேரணி சென்றுள்ளது.

இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
இதேவேளை, தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
பல நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டம், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் வலுவாக வெளிப்படுத்திய நிலையில் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.



சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்..! முன்னெடுக்கப்பட்டுள்ள கவனஈர்ப்பு போராட்டம்